
மிதிபலகையை மாற்றி மிதிக்கையில்,
மிதிபட்ட தன் வாழ்க்கையை சிந்திக்க நேரமில்லை.
உடுத்த ரெண்டு சேலைக்கு மேல் இல்லாமல்,
ஊருக்கு புடவை வழங்குவதற்கு நெய்து கொண்டு இருக்கிறாள்.
காதல் வாழ்வும் இவளுக்கு உண்டு,
கணவனும் கடும் நெசவாள உழைப்பாளிதான்
பரம்பரை சண்டைகளில், பாதி நேரம் கழிய
மீத நேரம் காதலின் ஊடல்.
கல்யாணம் கைதட்டி நிறைவேறியது*.
ஊரைவிட்டு ஓடிப்போனதால்.
காதல் கூடிய தெம்போ அல்லது குடும்ப நிலயோ
எதுவோ விரைவாக சேலையை நெய்து கொண்டு இருக்கிறாள்.
வாங்கும் சம்பளம் திங்களன்றே பங்கிட்டு கொடுத்தபின்
மீத, பற்றாக்குறைக்கு மறுபடியும் கைமாத்து வாங்குவாள்.
மருத்துவ செலவுக்கு நிலமெல்லாம் விற்றது போக
மிஞ்சியது ஏதும் இல்லை தரித்திரம் தவிர.
வறுமைக்கு வாக்கபட்டதாலோ என்னவோ
கஷ்டம் இவள் மீது ஒரு தலை காதலுடன்
எப்போதும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது
நல்லவேளை கணவன் குடிகாரனில்லை
பின் எப்படி மாண்டான் சிறு நீராக நோயால்?
இளம் விதவை, ஊரின் மைனர்மாருக்கெல்லாம் கொண்டாட்டம்
இங்கேயோ சொந்தங்களுக்கு திண்டாட்டம்
என்ன செய்வது வீட்டு ஆளுகளை எதுத்து கல்யாணம் செஞ்சாலும்
அவ நம்ம வீட்டு புள்ள இல்லையா?
அதுக்க்காகவா? இல்ல இவ இப்படி இருந்தா கேட்டு
குடும்பமானம் போயிடும்னா ? எப்படியோ வீட்டுக்குள்ள சேத்துகிட்டாங்க.
ஆனா பிழைப்பு மட்டும் அதே தான்,
மாரிமுத்து இப்பவும் மனசுக்குள்ள மஞ்சத்துல இருக்கான்
பலகையை மாற்றி போட்டு நெய்ய ஆரம்பிக்கையில்
மாறிப்போன தன் வாழ்க்கை இங்கே நினைவில்லை
வேற எடத்துல கவனம் இருந்தா, சீலையில் தத்தியல் (குறைபாடு) ஏறிவிடும்
குறை இல்லாம நெஞ்சதனால தான் குறைஞ்சு போச்சா வாழ்க்கை தரம்.
அவர் முகம் பாக்க குழந்தையும் இல்லை
அவள் வாழ்கையை ரசிக்க இந்த உலகில் எதுவும் இல்லை.
வெள்ளைசேலைக்கும், திருநீருக்கும் என்றுமே உலகில் பஞ்சமில்லை
இவள் ஆடை நெய்த போதும் யாரும் சகுனம் பார்ப்பதில்லை
( *யாரும் குடும்பத்தை மீறி மணக்க நேரின் மேளம் இன்றி மிக எளிமையாக கைதாளத்துடன், மிட்டாய் வழங்கப்பட்டு முடியம் கல்யாணம்)





